Monday, July 9, 2018

கூடல்

மலரோடு வண்டு கதைப் பேசுதே
மண்ணோடு மழையும் உறவாடுதே
என்னோடு நீயும் உறவாடவே
காத்திருக்கிறேன் கண்மணி

கரைத் தேடி அலையும் நடைப்போடுதே
நுரையாக பேசி விடைப் பெறுகுதே
உன்னோடு நானும் உரையாடவே
காத்திருக்கிறேன் கண்மணி

கனியோடு சுவையும் கலந்திருக்குதே
முள்ளோடு மலரும் இணைந்திருக்குதே
இரவோடு குளிரும் எனைத் தீண்டுதே
உனைத் தீண்ட ஏனடி இடைவெளி

மனதுள்ளே காதல் கரைத் தாண்டுதே
உனைக் காண கண்கள் அலைகின்றதே
விழியோடு கனவும் உறவாடுதே
தலைவனே, காண வருகிறேன்

மலர்கின்ற மாலைப் பொழுதானதே
இளங்காற்று தீண்ட உடல் வேகுதே
உனைக் கூடி களிக்க மனம் ஏங்குதே
தலைவனே, காண வருகிறேன்

Monday, March 5, 2018

asamyukta hastha viniyoga

சர்பசீர்ஷம்

சுழன்றுசாந்த மிழைத்தலும் அரவும் உழையும்
மங்களநீர்ச் சென்னியில் தெளித்தலும் ஊட்டமும்
இயவுட்கு நீரளித்தலும் தோள்தழுவும் மகிழ்ந அன்பும்
களிற்றின் தலையும் மற்போரிட கைவலி காட்டவும்
ஆகும் அரவுச்சென்னி பயன்களாம்.

பத்மகோஷ

கூவிளம் கொக்கு விளாம் முதலாக் கனிகளும்
முகையும் மலர்மழையும் அலர்க் கொத்தும்
தாமரை செம்பருத்தி முதலா மலர்களும்
கலமும் அதில் நல்லுணவும் ,முட்டையும்
கொங்கையும் வட்டப் பந்தும் புற்றும்
சுழலாட்டமும் மணிகளும் இவை ஆகும்
தாமரை மொட்டின் பயன்களாம்


Tuesday, February 27, 2018

AgavalPa songs - Solitude


எவ்வழி என்பா் சென்றதோ அறியோம்
யாதும் அறிவாய் காற்றே! அவா்தம்
புகலிடம் புகுவாய் பசலை பூத்த
திடமென் வேய்தோள் தேயுறத்
தீதாற்றும் என்னிலை சென்றுரை விரைந்தே!


கேளாய் தோழி! நெருநை தொழூஉ துவர்நிறத்து
கொலை ஏறுகோடுக் காணினும் அஞ்சான் பாய்ந்துதன்
கைஇருக் கொண்டு இமில் தழீஇய அப்பொதுவன் 
கங்குல் கனவில் நாணவந்தான் சுணங்கு அணி 
முலைஇமில் எனவோ தழீஇ எயிற்று
ஊறும் அமிழ்துண்டு களித்தானடி நல்லாய் மகனவன்

கேளாய் தோழி நெருநை நடந்ததுவோ 
பணிசெய் அம்மனையில் கணினி அகத்து 
நிரல்புக்கி நானோ நைந்ததனால் சற்றே 
தேநீர்பருகி அயர்வற சென்றேனா அவனும் 
வந்தான் கண்டேனா கங்குலுள் 
கனவில் என்னிதழ்நீர் குடித்தானடி என்செய்கேன்

Thursday, January 4, 2018

vazhakuraitha kathai வழக்குரைத்தக் காதை

நீர்வார் கண்ணை எம்முன் வந்தோய்
      யாரையோய்க் கூறாய்
சீர்தொலை முகமொடு கையில் தனிச்
     சிலம்பேந்தி வந்தோய்
ஆர்வேல் காவலர் இடர்ந்தும் புறந்தள்ளி
      வந்தோய்க் கொற்றவை
உருக்கொள் பெண்ணே அமிளி யோடிங்கு
         புகுந்ததேன் கூறாய்

ஊழ்வினை உருத்த பொருளோடு புகழும் 
         இழந்துகெட துணையோடு
வாழ்தல் வேண்டீஇ நின்நகர் வந்தோம்
         படிறில்லாப் பெருமாட்டி நின்
கழற்சிலம்பு பகர்ந்து பொருள் கொள்
         வோமெனவந்த கணவனை
கள்வனென உன்நீதிக் கொன்றக் கோவலன்
         மனைவி கண்ணகி யானே

கள்வனைக் கூற்றுக் கிரையாக வகுத்தல்
       சான்றேர் அறமேஎ நீ
கலங்கியே எம்முன் வந்தோய் இருந்தும்
       வீழ்ந்தது மீளாது என்ப
கோவலன் தேவி இஃதறியாது இவ்விடத்தே 
      வழக்கெடுத்துத் தென்னவர்
கோமான் எம்முன் வந்தோய்ச் செல்வோய்
      அரசவை தான் விடுத்து

கேளாது முடிவுரைத்த கொடுங் கோலரசே
         கள்வன் நீயே ஆகுக
கேள்வனே கள்வன் என்னுடை யாரல்லர்
        அவையோரே கேன்மின்
இச்செயலும் முறையோ கன்றுக் கிரங்கி
        மகனைக் கொன்றவர்
சோழத் தேவர் செருக் குடைமையால்
        அறங்கொன்றவன் நீ ஆகுக

அல்லவே கண்ணகி படிறுதேரா முடிவு
         உரைத்தேன் அல்லவே
உண்டோச் சான்று நின்வழக்கு வலியுற
        அதையும் இவ்வேக் கூறாய்
அல்லவே மன்னவ என்கோவலர் கள்ளன்
        அல்லவே தேராமன்னா
உண்டிங்குச் சான்று துணைஇல் என்கழற்
        சிலம்பு உரைக்கும் கேன்மின்

குலையிழைப் பெண்னே நின் தனிச்சிலம்பு
         தருகவெனப் பெற்றான்
கூடியிருந்தோர் முன்னே அவள் சிலம்பு
          புடைப்ப உதிர்த்தது
மணிகள் காணோய் மன்னவ நின் தேவியின்
         சிலம்பு களிரண்டும்
புடைப்போய் ஒன்று உதிர்ப்பது மணிகள்
         அறக்கேட்டை அறிவோய்

கோப்பெருந் தேவியின் சிலம்பி லொன்று
         உரைத்தது உண்மை
கோவலர் பாற்குற்றம் அல்ல தானேஅறம்
         வழுவினன் என்றோ
கோமானே பதறிதரை யினிற்வீழ்ந் தீரோ
          வளைந்த உம்செங்
கோல்நேர் படவையம் இறந்தோய் இவ்வே
          தேவி யானும் இறப்பேன்

உழுவை வெருக்கொள உருக்கொள் வல்
          யவனரைப் பணித்த
செழியா சரியும் நின்குடை அந்நிழலில்
          வாழ்ந்த தமிழ் வளர்
கழகநகர் முழுதும் இரையெனத் தீகொள்ள
          யானும் என் இடமுலை
கிழித்தேன் துணையில்லாதினி உயிர் வளர்
         கடவேன் ஆவிப் பிரிவேன்  

Thursday, November 16, 2017

ஆண்டாள் பாட்டு

ஆடித் திங்கள் பூர விண்மீன் விசும்பில்
கூடி வந்த பொன்னாளில் ஆறு ஐந்தும்
பாடித் தந்த பொன்மகள் புதூரில் வேயர்
குஉடி விட்டுச்சித்தன் மகளென உதித்தாள்

பேதை முதலே கண்ணன் சிறப்பெல்லாம்
தந்தை வாய்மொழி அவளுள்ளே சேர்க்க
போதைத் தேன் சுவைத்த வண்டிவளோ
கோதை காதலால் உலகறியாது மயங்கினாள்

பெற்றம் மேய்த்த பிரானுக்கு எழுமையும்
உற்றோமே ஆவோம் எனக் கோதை அவள்
குற்றமில்லா பருவம் முதலே காதலால்
தேற்றமான கருத்தை அகத்தே வளர்த்தாள்

மங்கை என வளர் கோதை மார்கழி
திங்கள் நோன்பு காத்தாள் பாவையருடனே
சங்கத் தமிழ் பாவகையுடனே நித்தம்
தங்கள் ஆயனை மாயனைப் பாடினாள்

வளைந்த இமைகட்கு கீழே கூம்பின ஆம்பல்
பிறை போல் நுதல் அறல் போல் கூந்தல்
குழை பொருஞ் செவி இடை இல் திண்
முலை ஆயனுக்கே என திண்ணம் கொண்டாள்

வாரணம் ஆயிரம் சூழ நான் மறைகளோதி
தோரணம் நாட்டி பாளை கமுகு நாற
பூரணப் பொற்குடம் வைத்து தண் பந்தலிட்டு
நாரணன் மணங்கொள்ள கனவுக் கண்டாள்

Sunday, September 17, 2017

நரசிம்ம பெருமுழக்கம்

பகல் அன்றி இரவும் அன்றி இடையே
பொழுதொன்று அகமன்றி புறமுமன்றி
இடையினிற் இடனொன்று நரனன்றி
கொல் விலங்கன்றி  எவர் உண்டு

எஃகு உருக்கி செய்பொருள் அல்ல
எமை கொல்வான் எதைக் கொள்வான்
செரு தொடுத்த அவுணன் என் திறனொழிய
செரு தொடுக்க பெருமாள் எவன் உள்ளான்

 அகம்  அல்ல இல் புறமும் அல்ல
எவ்விடம் நின்று என்னை வெல்வான்
அறியா பாலன் விளிக் கேட்டும்
விழிக் கொள்ளா நாரணன் என்றான்

அரி உள்ளான் விழிக் கொள்வான் புவி
அறிய அறம் ஓங்க அவன் வருவான்
தூணிலும் துமியினிலும் இருப்பான்
மதிகெட்டார் மருள் நீக்கும் நாரணன்

வருவானோ எம்முன் நகைக் கூட்டம்
செய்தான் என்னை வெல்வதோர் வழி
அறிந்திலர் நரனும் உம்பரும் பேழ் அரியும்
எவர் குறித்தும் கிலி அறியேனென்றான் 

எங்கும் உள்ளான் என்றும் உள்ளான்
ஊழின் திரை காட்ட முற்படா எனினும்
ஞாலம் போற்றும் அரியென மொழிதல்
யாரினும் வலியவன் அவனென உணர்வீர்

சாதலற்று வாழ பேறு பெற்றேன் யான்
எண் திசை மறவரும் அஞ்ச வென்றேன்
ஞாலம் போற்றும் எஞ்ஞான்றும் எம்மை
யான் என்றும் போற்றிலேன் அரியை

ஆசையறு அதன் பயன் சா ஐயமறும்
பணி செய் மேலோர்க்கு பணிந்து செய்
எப்பேறும் எஞ்ஞான்றும் அரியிடம் ஈந்திடு
இங்கனம் வாழ் மேலோர் உய்வரே

இன்றே வரச் சொல் இங்கு வரச் சொல்
துஞ்ச துணிவுக் கொள் அரியை எம்முன்
இருக் கைகள் தோமர படை வீசி
தூண் கோடிடித்து விளித்தான் தன் கூற்றை

பகல் முடிந்து இரவு எழவே இடைப்
பொழுது ஒரு நாழி அப்பொழுது
தூண் உடைத்து புலம் நடுங்க உறு
உறுவென அவன் உறுமி வந்தான்

செருக்கேறி பிதற்றும் அரக்கன் முன்
நர உடலும் அரிமா தலையும்  ஊன் 
கிழிக்கும் வல்லெயிறும் நற நறவென
வள்ளுகிருடன் சீறி கோளரியாய் நின்றான்

தன் படை யாவும் அற்றற்று வீழ
கோடும் நுதிலும் சிதையக் கண்டான்
இவனே மாயன் அறமெனும் கூற்று
தன்னைக் கொல்ல நிற்க கண்டான்

அறமறுத்த இரணியன் ஆகம் அறுக்க
மனைப் படியில் மடி மிசை கிடத்தினான்
வல்லுடல் வள்ளுகிரால் வகிர்ந்து குருதிப் பட
சிவந்த முகமென அருளும் சிங்களே்குன்றமே

நான்முகனும் பிறை பித்தனும் முப்பத்து
மூவரும் நா தழுக்க வெரு கொண்டினரே
ஆர் கோட்ட தினை சிதை பெருமால் கேழல்
வகிர்ந்த சிம்மமாய் அரி நின்ற சிங்கவேள்குன்றமே 

பத்தனை பேண ஆமருவி வந்தான்
தந்தையெனினும் அறம் தளிர தனையன்
நெறியுரை கேளா அவுணன் உடல் கீண்டான்
செஞ்சுமகள் துணை சேர தண்ணகம் கொண்டான்

தமிழ் மாநிலம் வடவெல்லை தண்முகில்
சூழ்வேங்கடம் அதன் வட குடக்கே
மருள் நீக்கி அருள பேழ்வாய் கோளரியாய்
தான் அமர்ந்த சிங்கவேள் குன்றமே

Tuesday, August 8, 2017

ஆடலரசர் பெருமுழக்கம்

ஆட பயில என்னை பணித்தான்
அஃது ஏற்று யானும் பணிந்தேன்
புறம் தள்ளாது  திறம் தோய
நான் பயில அருட் செய்த
தண் உள்ளம் அம்மை ஊர்மிளை
பெருந்தகை அவர் தாள் யான்
என்றும் பணிவேன்

பெருந்தகை அருள் செய்ய யானும்
ஆடற் கல்வி பயின்றறிய நூலறி
பெருவுள்ளம் கொள் வள்ளல் இரு
பெண்ணம்மை இரமை சாய் கிருபை
அவர் தாளினும் யான் என்றும்
பணிவேன்

புவியே நின் யாக்கை  நின் வாய்மொழி
அண்ட  பேரரவம் அருங்கலங்கள்
சூடிய பிறையும் ஒளிர் மீன்களும்
இப்பெருமை யாவும் உன்னதே அன்றோ
நல் தில்லை பிரானே நின்னை தொழுதேன்

உள்ளத்தில்  பொதிந்தது ஓர் நல் எண்ணம்
சதங்கை பூண் பொற்பாதம் எம்பிரானார்
தம்முடையதே அவ்வடி யானும் தொழவே
சபேசன் தந்த ஆட்டம் தவமென ஆடவே

பித்தை தரித்து பிறை அணிந்து
மரையேந்தி வெள்ளி வரை மிசை
நிறைப்  பொருளே நின் உடுக்கை
டம டமவென நீ தாண்டவமாட கண்டனே

தோடுடைய செவியா சுடலைப் பொடி
உடலெல்லாம் பூசி முப்புரம் எரிவித்த
முக்கண் முதல்வா நின் உடுக்கை
டம டமவென நீ தாண்டவமாட கண்டனே

வலமூன்றி  இடம் ஏறு தில்லை
வழுதிக்கிரங்கி வலம் ஏறு கூடல்
நகர்வாழ் இறையே நின் உடுக்கை
டம டமவென நீ தாண்டவமாட கண்டனே

பித்தை விரித்து உடைப்பெடுத்த
பெருநீர் கங்கை தரை இறங்க
அருள் பொருந்திறையே நின் உடுக்கை
டம டமவென நீ தாண்டவமாட கண்டனே

கள்ளவிழ் பூங்கணை தொடுத்த மாறன்
மெய்யழித்து தக தகவென நேயன்
உயிரோம்ப கூற்றை தாளோங்கி
உயிரழித்து நீ தாண்டவமாட கண்டனே

மாமுனிக் கிரங்கி உம்பர் பண்ணெடுப்ப
தகிட தகிட தகிடவென சீரமைய
முழவு முழங்க முழங்க வெள்ளியரங்கிற்
நீளரவு தாரணிந்து நீ தாண்டவமாட கண்டனே

வலக்கை உடுக்கை ஏந்த அரைபிறை இடக்கை
தீர்கை தீயெரிக்க கல்லாமை அவுணன்
மிசை அரைக்கால் வலமூன்றி இடதெழ
கீழ் வலக் கை காப்பு இடையரவு மறுமையற

பித்தை பூட்டும் பெருநீர் பெருவாழ்வருள
சென்னிச் சூடும் பிறை அறுபொழுதருள
உடுக்கை ஒலித்து புது வாழ்வு அருள
கீழ் இடக் கை துதிக்கை யாவும் உன்னுளிழுக்க

வலக் கழல் தீதறியாமை மிதித்தழிக்க
இடக் கழல் தீதில்லா உய்தி அளிக்க
திருவாச்சி இவ் வாழ்வு நில்லாதுழள
இஃது விளக்கி தில்லையிற் கூத்தாட கண்டேனே

மொழிக்கு செரு தொடுத்து கீரர்க்கு
நுதல் கண்ணால் தெறல் கொடுத்து
அருள் கண்ணால் புகழ் கொடுத்து
நின் கையால் பாகொடுத்து நீ தமிழ் பாட கண்டனே

அம்பரம் அறுத்து உயர்ந்தோனே தாள்
தரணி பிளந்து நீண்டோனே சித்தும்
சத்தியும் ஒன்றென நின்றோனே என்
தீதற கனல் தீயென நீ தாண்டவமாட கண்டனே

புலி தோலை இடையிற் உடுத்தி மிளிர்
கொன்றை அடர் பித்தையிற் சூடி விறு
விறுவென வேழம் மெய்க்கிழித்து கெடு
செருக்கழித்து கானிடையே தாண்டவமாட கண்டனே