ஆட பயில என்னை பணித்தான்
அஃது ஏற்று யானும் பணிந்தேன்
புறம் தள்ளாது திறம் தோய
நான் பயில அருட் செய்த
தண் உள்ளம் அம்மை ஊர்மிளை
பெருந்தகை அவர் தாள் யான்
என்றும் பணிவேன்
பெருந்தகை அருள் செய்ய யானும்
ஆடற் கல்வி பயின்றறிய நூலறி
பெருவுள்ளம் கொள் வள்ளல் இரு
பெண்ணம்மை இரமை சாய் கிருபை
அவர் தாளினும் யான் என்றும்
பணிவேன்
புவியே நின் யாக்கை நின் வாய்மொழி
அண்ட பேரரவம் அருங்கலங்கள்
சூடிய பிறையும் ஒளிர் மீன்களும்
இப்பெருமை யாவும் உன்னதே அன்றோ
நல் தில்லை பிரானே நின்னை தொழுதேன்
உள்ளத்தில் பொதிந்தது ஓர் நல் எண்ணம்
சதங்கை பூண் பொற்பாதம் எம்பிரானார்
தம்முடையதே அவ்வடி யானும் தொழவே
சபேசன் தந்த ஆட்டம் தவமென ஆடவே
பித்தை தரித்து பிறை அணிந்து
மரையேந்தி வெள்ளி வரை மிசை
நிறைப் பொருளே நின் உடுக்கை
டம டமவென நீ தாண்டவமாட கண்டனே
தோடுடைய செவியா சுடலைப் பொடி
உடலெல்லாம் பூசி முப்புரம் எரிவித்த
முக்கண் முதல்வா நின் உடுக்கை
டம டமவென நீ தாண்டவமாட கண்டனே
வலமூன்றி இடம் ஏறு தில்லை
வழுதிக்கிரங்கி வலம் ஏறு கூடல்
நகர்வாழ் இறையே நின் உடுக்கை
டம டமவென நீ தாண்டவமாட கண்டனே
பித்தை விரித்து உடைப்பெடுத்த
பெருநீர் கங்கை தரை இறங்க
அருள் பொருந்திறையே நின் உடுக்கை
டம டமவென நீ தாண்டவமாட கண்டனே
கள்ளவிழ் பூங்கணை தொடுத்த மாறன்
மெய்யழித்து தக தகவென நேயன்
உயிரோம்ப கூற்றை தாளோங்கி
உயிரழித்து நீ தாண்டவமாட கண்டனே
மாமுனிக் கிரங்கி உம்பர் பண்ணெடுப்ப
தகிட தகிட தகிடவென சீரமைய
முழவு முழங்க முழங்க வெள்ளியரங்கிற்
நீளரவு தாரணிந்து நீ தாண்டவமாட கண்டனே
வலக்கை உடுக்கை ஏந்த அரைபிறை இடக்கை
தீர்கை தீயெரிக்க கல்லாமை அவுணன்
மிசை அரைக்கால் வலமூன்றி இடதெழ
கீழ் வலக் கை காப்பு இடையரவு மறுமையற
பித்தை பூட்டும் பெருநீர் பெருவாழ்வருள
சென்னிச் சூடும் பிறை அறுபொழுதருள
உடுக்கை ஒலித்து புது வாழ்வு அருள
கீழ் இடக் கை துதிக்கை யாவும் உன்னுளிழுக்க
வலக் கழல் தீதறியாமை மிதித்தழிக்க
இடக் கழல் தீதில்லா உய்தி அளிக்க
திருவாச்சி இவ் வாழ்வு நில்லாதுழள
இஃது விளக்கி தில்லையிற் கூத்தாட கண்டேனே
மொழிக்கு செரு தொடுத்து கீரர்க்கு
நுதல் கண்ணால் தெறல் கொடுத்து
அருள் கண்ணால் புகழ் கொடுத்து
நின் கையால் பாகொடுத்து நீ தமிழ் பாட கண்டனே
அம்பரம் அறுத்து உயர்ந்தோனே தாள்
தரணி பிளந்து நீண்டோனே சித்தும்
சத்தியும் ஒன்றென நின்றோனே என்
தீதற கனல் தீயென நீ தாண்டவமாட கண்டனே
புலி தோலை இடையிற் உடுத்தி மிளிர்
கொன்றை அடர் பித்தையிற் சூடி விறு
விறுவென வேழம் மெய்க்கிழித்து கெடு
செருக்கழித்து கானிடையே தாண்டவமாட கண்டனே