Thursday, November 16, 2017

ஆண்டாள் பாட்டு

ஆடித் திங்கள் பூர விண்மீன் விசும்பில்
கூடி வந்த பொன்னாளில் ஆறு ஐந்தும்
பாடித் தந்த பொன்மகள் புதூரில் வேயர்
குஉடி விட்டுச்சித்தன் மகளென உதித்தாள்

பேதை முதலே கண்ணன் சிறப்பெல்லாம்
தந்தை வாய்மொழி அவளுள்ளே சேர்க்க
போதைத் தேன் சுவைத்த வண்டிவளோ
கோதை காதலால் உலகறியாது மயங்கினாள்

பெற்றம் மேய்த்த பிரானுக்கு எழுமையும்
உற்றோமே ஆவோம் எனக் கோதை அவள்
குற்றமில்லா பருவம் முதலே காதலால்
தேற்றமான கருத்தை அகத்தே வளர்த்தாள்

மங்கை என வளர் கோதை மார்கழி
திங்கள் நோன்பு காத்தாள் பாவையருடனே
சங்கத் தமிழ் பாவகையுடனே நித்தம்
தங்கள் ஆயனை மாயனைப் பாடினாள்

வளைந்த இமைகட்கு கீழே கூம்பின ஆம்பல்
பிறை போல் நுதல் அறல் போல் கூந்தல்
குழை பொருஞ் செவி இடை இல் திண்
முலை ஆயனுக்கே என திண்ணம் கொண்டாள்

வாரணம் ஆயிரம் சூழ நான் மறைகளோதி
தோரணம் நாட்டி பாளை கமுகு நாற
பூரணப் பொற்குடம் வைத்து தண் பந்தலிட்டு
நாரணன் மணங்கொள்ள கனவுக் கண்டாள்

No comments:

Post a Comment