Thursday, November 16, 2017

ஆண்டாள் பாட்டு

ஆடித் திங்கள் பூர விண்மீன் விசும்பில்
கூடி வந்த பொன்னாளில் ஆறு ஐந்தும்
பாடித் தந்த பொன்மகள் புதூரில் வேயர்
குஉடி விட்டுச்சித்தன் மகளென உதித்தாள்

பேதை முதலே கண்ணன் சிறப்பெல்லாம்
தந்தை வாய்மொழி அவளுள்ளே சேர்க்க
போதைத் தேன் சுவைத்த வண்டிவளோ
கோதை காதலால் உலகறியாது மயங்கினாள்

பெற்றம் மேய்த்த பிரானுக்கு எழுமையும்
உற்றோமே ஆவோம் எனக் கோதை அவள்
குற்றமில்லா பருவம் முதலே காதலால்
தேற்றமான கருத்தை அகத்தே வளர்த்தாள்

மங்கை என வளர் கோதை மார்கழி
திங்கள் நோன்பு காத்தாள் பாவையருடனே
சங்கத் தமிழ் பாவகையுடனே நித்தம்
தங்கள் ஆயனை மாயனைப் பாடினாள்

வளைந்த இமைகட்கு கீழே கூம்பின ஆம்பல்
பிறை போல் நுதல் அறல் போல் கூந்தல்
குழை பொருஞ் செவி இடை இல் திண்
முலை ஆயனுக்கே என திண்ணம் கொண்டாள்

வாரணம் ஆயிரம் சூழ நான் மறைகளோதி
தோரணம் நாட்டி பாளை கமுகு நாற
பூரணப் பொற்குடம் வைத்து தண் பந்தலிட்டு
நாரணன் மணங்கொள்ள கனவுக் கண்டாள்

Sunday, September 17, 2017

நரசிம்ம பெருமுழக்கம்

பகல் அன்றி இரவும் அன்றி இடையே
பொழுதொன்று அகமன்றி புறமுமன்றி
இடையினிற் இடனொன்று நரனன்றி
கொல் விலங்கன்றி  எவர் உண்டு

எஃகு உருக்கி செய்பொருள் அல்ல
எமை கொல்வான் எதைக் கொள்வான்
செரு தொடுத்த அவுணன் என் திறனொழிய
செரு தொடுக்க பெருமாள் எவன் உள்ளான்

 அகம்  அல்ல இல் புறமும் அல்ல
எவ்விடம் நின்று என்னை வெல்வான்
அறியா பாலன் விளிக் கேட்டும்
விழிக் கொள்ளா நாரணன் என்றான்

அரி உள்ளான் விழிக் கொள்வான் புவி
அறிய அறம் ஓங்க அவன் வருவான்
தூணிலும் துமியினிலும் இருப்பான்
மதிகெட்டார் மருள் நீக்கும் நாரணன்

வருவானோ எம்முன் நகைக் கூட்டம்
செய்தான் என்னை வெல்வதோர் வழி
அறிந்திலர் நரனும் உம்பரும் பேழ் அரியும்
எவர் குறித்தும் கிலி அறியேனென்றான் 

எங்கும் உள்ளான் என்றும் உள்ளான்
ஊழின் திரை காட்ட முற்படா எனினும்
ஞாலம் போற்றும் அரியென மொழிதல்
யாரினும் வலியவன் அவனென உணர்வீர்

சாதலற்று வாழ பேறு பெற்றேன் யான்
எண் திசை மறவரும் அஞ்ச வென்றேன்
ஞாலம் போற்றும் எஞ்ஞான்றும் எம்மை
யான் என்றும் போற்றிலேன் அரியை

ஆசையறு அதன் பயன் சா ஐயமறும்
பணி செய் மேலோர்க்கு பணிந்து செய்
எப்பேறும் எஞ்ஞான்றும் அரியிடம் ஈந்திடு
இங்கனம் வாழ் மேலோர் உய்வரே

இன்றே வரச் சொல் இங்கு வரச் சொல்
துஞ்ச துணிவுக் கொள் அரியை எம்முன்
இருக் கைகள் தோமர படை வீசி
தூண் கோடிடித்து விளித்தான் தன் கூற்றை

பகல் முடிந்து இரவு எழவே இடைப்
பொழுது ஒரு நாழி அப்பொழுது
தூண் உடைத்து புலம் நடுங்க உறு
உறுவென அவன் உறுமி வந்தான்

செருக்கேறி பிதற்றும் அரக்கன் முன்
நர உடலும் அரிமா தலையும்  ஊன் 
கிழிக்கும் வல்லெயிறும் நற நறவென
வள்ளுகிருடன் சீறி கோளரியாய் நின்றான்

தன் படை யாவும் அற்றற்று வீழ
கோடும் நுதிலும் சிதையக் கண்டான்
இவனே மாயன் அறமெனும் கூற்று
தன்னைக் கொல்ல நிற்க கண்டான்

அறமறுத்த இரணியன் ஆகம் அறுக்க
மனைப் படியில் மடி மிசை கிடத்தினான்
வல்லுடல் வள்ளுகிரால் வகிர்ந்து குருதிப் பட
சிவந்த முகமென அருளும் சிங்களே்குன்றமே

நான்முகனும் பிறை பித்தனும் முப்பத்து
மூவரும் நா தழுக்க வெரு கொண்டினரே
ஆர் கோட்ட தினை சிதை பெருமால் கேழல்
வகிர்ந்த சிம்மமாய் அரி நின்ற சிங்கவேள்குன்றமே 

பத்தனை பேண ஆமருவி வந்தான்
தந்தையெனினும் அறம் தளிர தனையன்
நெறியுரை கேளா அவுணன் உடல் கீண்டான்
செஞ்சுமகள் துணை சேர தண்ணகம் கொண்டான்

தமிழ் மாநிலம் வடவெல்லை தண்முகில்
சூழ்வேங்கடம் அதன் வட குடக்கே
மருள் நீக்கி அருள பேழ்வாய் கோளரியாய்
தான் அமர்ந்த சிங்கவேள் குன்றமே

Tuesday, August 8, 2017

ஆடலரசர் பெருமுழக்கம்

ஆட பயில என்னை பணித்தான்
அஃது ஏற்று யானும் பணிந்தேன்
புறம் தள்ளாது  திறம் தோய
நான் பயில அருட் செய்த
தண் உள்ளம் அம்மை ஊர்மிளை
பெருந்தகை அவர் தாள் யான்
என்றும் பணிவேன்

பெருந்தகை அருள் செய்ய யானும்
ஆடற் கல்வி பயின்றறிய நூலறி
பெருவுள்ளம் கொள் வள்ளல் இரு
பெண்ணம்மை இரமை சாய் கிருபை
அவர் தாளினும் யான் என்றும்
பணிவேன்

புவியே நின் யாக்கை  நின் வாய்மொழி
அண்ட  பேரரவம் அருங்கலங்கள்
சூடிய பிறையும் ஒளிர் மீன்களும்
இப்பெருமை யாவும் உன்னதே அன்றோ
நல் தில்லை பிரானே நின்னை தொழுதேன்

உள்ளத்தில்  பொதிந்தது ஓர் நல் எண்ணம்
சதங்கை பூண் பொற்பாதம் எம்பிரானார்
தம்முடையதே அவ்வடி யானும் தொழவே
சபேசன் தந்த ஆட்டம் தவமென ஆடவே

பித்தை தரித்து பிறை அணிந்து
மரையேந்தி வெள்ளி வரை மிசை
நிறைப்  பொருளே நின் உடுக்கை
டம டமவென நீ தாண்டவமாட கண்டனே

தோடுடைய செவியா சுடலைப் பொடி
உடலெல்லாம் பூசி முப்புரம் எரிவித்த
முக்கண் முதல்வா நின் உடுக்கை
டம டமவென நீ தாண்டவமாட கண்டனே

வலமூன்றி  இடம் ஏறு தில்லை
வழுதிக்கிரங்கி வலம் ஏறு கூடல்
நகர்வாழ் இறையே நின் உடுக்கை
டம டமவென நீ தாண்டவமாட கண்டனே

பித்தை விரித்து உடைப்பெடுத்த
பெருநீர் கங்கை தரை இறங்க
அருள் பொருந்திறையே நின் உடுக்கை
டம டமவென நீ தாண்டவமாட கண்டனே

கள்ளவிழ் பூங்கணை தொடுத்த மாறன்
மெய்யழித்து தக தகவென நேயன்
உயிரோம்ப கூற்றை தாளோங்கி
உயிரழித்து நீ தாண்டவமாட கண்டனே

மாமுனிக் கிரங்கி உம்பர் பண்ணெடுப்ப
தகிட தகிட தகிடவென சீரமைய
முழவு முழங்க முழங்க வெள்ளியரங்கிற்
நீளரவு தாரணிந்து நீ தாண்டவமாட கண்டனே

வலக்கை உடுக்கை ஏந்த அரைபிறை இடக்கை
தீர்கை தீயெரிக்க கல்லாமை அவுணன்
மிசை அரைக்கால் வலமூன்றி இடதெழ
கீழ் வலக் கை காப்பு இடையரவு மறுமையற

பித்தை பூட்டும் பெருநீர் பெருவாழ்வருள
சென்னிச் சூடும் பிறை அறுபொழுதருள
உடுக்கை ஒலித்து புது வாழ்வு அருள
கீழ் இடக் கை துதிக்கை யாவும் உன்னுளிழுக்க

வலக் கழல் தீதறியாமை மிதித்தழிக்க
இடக் கழல் தீதில்லா உய்தி அளிக்க
திருவாச்சி இவ் வாழ்வு நில்லாதுழள
இஃது விளக்கி தில்லையிற் கூத்தாட கண்டேனே

மொழிக்கு செரு தொடுத்து கீரர்க்கு
நுதல் கண்ணால் தெறல் கொடுத்து
அருள் கண்ணால் புகழ் கொடுத்து
நின் கையால் பாகொடுத்து நீ தமிழ் பாட கண்டனே

அம்பரம் அறுத்து உயர்ந்தோனே தாள்
தரணி பிளந்து நீண்டோனே சித்தும்
சத்தியும் ஒன்றென நின்றோனே என்
தீதற கனல் தீயென நீ தாண்டவமாட கண்டனே

புலி தோலை இடையிற் உடுத்தி மிளிர்
கொன்றை அடர் பித்தையிற் சூடி விறு
விறுவென வேழம் மெய்க்கிழித்து கெடு
செருக்கழித்து கானிடையே தாண்டவமாட கண்டனே





Wednesday, July 19, 2017

இன்று பாட தோன்றியது

கண்ணில் என் கண்ணில்
நீரருவி வழிவது ஏன்
பெண்னே உன்னை தொலைத்து
நான் வாடி வருந்தியதால்
நெஞ்சத் தீவினிலே எங்கும் துன்பம்
சூழ்ந்திருக்க
காதல் ஒன்றதுவே அகமகிழ்வை
கொடுத்துதவும்
காலம் கடந்த பின்னும் காதல் வாழ்ந்திருக்கும்
மெய்க் காதல் ஒன்றே வாழ்வின் பொருளே

வந்தேன் நான் வந்தேன்
மெய்க் காதல் இன்றுணர்ந்து
கண்ணீர் உன் கண்ணில்
நான் துடைப்பேன் இதழ்க் கொண்டு
காதல் வாழ்ந்திருந்த உன் நெஞ்சத்
தீவினிலே
நானும் வாழ்ந்திருக்க துன்பம் நீந்தி
வந்தேன்
என்றும் இணைந்திருப்போம் வாழும் நாட்களெல்லாம்
சொல்லும் பொருளும் போலே ஆவோம்

Thursday, July 13, 2017

கள்வனே கண்ணா - Kalvanae Kanna

கண்ணா  கண்ணா  எதுவரை கண்ணா
கள்ள நாடகம் நீ புரிவது

கண் முன்னே உன் முகம் வந்து போகும்
ஆயினும் அருகில் நீ இல்லை
கலைந்தது கனவே விடிந்தது பொழுதோ
என்றால் அல்லும் வரவில்லை

மாலை வருவாயா என்னை
மணம் கொள்வாயா இல்லை
வராது மனம் வருத்திக் கொல்வாயா
பகலும் காத்திருந்து கழித்தேன்
இனி இரவும் வந்தது உடன்
கொல்லும் தனிமை என்னை
கொள்வது அறிந்திட மாட்டாயா

குழலூதி என் மனதை கவர்ந்தான்
என் மேய் தொழில் கெடவும் செய்தான்
அழுதேமா என்றால் என்னை முயங்கு
ஆநிரை கவர்ந்து இங்கு வருவேனென்றான்

என்னாய் புது வெண்ணெய் மனையில்
உயரே வைத்தாள் கள்ளஞ் சொல்லி
என்னை ஏவினான் தின்ன கிடைத்ததும்
உனக்கேனடி என்றே ஏங்க வைத்தான்

கள்ளவிழ் பூங்காவில் கொங்கு தேர்
வண்டுகளே கண்ணனிடம் செப்புவீரோ
பசலை உயிர் உருக்க இவள் வாடினாள்
புலம்பு அறுக்க வருவீரே என்று

கலனும் ஏந்தாது கன்றும் பருகாது
வீணே சேறாக்கும் ஆமுலை பாலன்னது
அரிவை அழகு பெருங்கடல் குடிக்கும்
மேகங்காள் கண்ணனிடம் இவை செப்புவீரோ

முள் வளர் சுரமிடை நிரை மேய்ப்போன்
எல் உள்ளளவு திரிவோன் குழல்
இசைக்கும் துளையிடை வாய்நீர்க்கும்
ஏங்கியதை நாடோடி காற்றே செப்புவீரோ

சிற்றில் சிதைத்தும் கோதை அறுத்தும்
மனங்கொள்ளன் மணம் கொள்வேனென
சொல்லுரைத்தவன் வருகைஇல் என் திசை
வரக் கண்டு கூவுவாயோ பொந்திடை குயிலே

கண்ணனே என்று வருவாயோ
இரவும் வந்தது வருத்திக்
கொல்லும் தனிமையும் தந்தது
அல்லினில் உடையே இணைப்பில்
சிறைப்படுத்த வருக பெண்ணாகம்
விழையும் வாயமுதம் தருவாயோ
மரபு முறை மணம் கொள்வாயோ

கண் முன்னே உன் முகம் வந்து போகும்
ஆயினும் அருகில் நீ இல்லை

கண்ணா  கண்ணா  எதுவரை கண்ணா
கள்ள நாடகம் நீ புரிவது

Sunday, April 23, 2017

Summa

கண்கள் இரண்டும் ஒரு காதல் சொல்லுதே
என் அருகில் நீ வா என்றே அகவுதே
ஊடுருவும் உன் கண்ணொளி என் உடலில்
நாணம் கொண்டு வருதே

நேற்று என் கனவில் வந்து நீ செய்தது
வீண் குறும்புகள் இருந்தாலும் களித்தேன்